கலைஞரும் தொழு நோயாளிகளும்.........
ஆகஸ்ட் 7 2018, தலைவர் கலைஞர் நம்மைவிட்டுப் பிரிந்துவிட்டார் என்று
தொலைக்காட்சிகளில் செய்திகள் வரத் துவங்கிவிட்டன.
கலைஞர் மறைந்த
செய்தி கேட்டு அந்தக் காப்பகத்தில் இருப்பவர்கள் மிகுந்த உணர்ச்சி வயப்பட்ட
வருத்தமான மனநிலையிலிருந்தனர். அந்தக் காப்பகத்தில் இருபது ஆண்டுகளாக
இருந்து வரும் ஒரு தொழுநோயாளி தழுதழுத்த குரலில் பேசுகையில், "கலைஞர் இல்லையென்றால் நானும் எனது
கூட்டாளிகளும் தெருக்களில் தள்ளப்பட்டிருப்போம் என்று கூறுகிறார்.
"நாங்கள்
பிச்சையெடுப்பது கூட ஏற்றுக்கொள்ளப்படவில்லை" என்று மிகுந்த மனவருத்தத்துடன்
கூறுகிறார்,
எங்களுக்கு என்று
ஒரு இடத்தையும் கொடுத்து உடலைப் பராமரிக்க வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த
அந்த மாமனிதனைக் கண்டு வருந்துகிறார்.
அவர் மட்டுமல்ல
ஒட்டுமொத்த தமிழகமே கண்ணீர் வடித்தது, எப்படி இப்படி ஒரு திட்டம் கலைஞரிடமிருந்து
தோன்றியிருக்கும்? காரணம் அவர்
தமிழகத்தை உளமார நேசித்தார். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத நிபந்தனையற்ற அன்பைச்
செலுத்தினார். அவரின் பார்வை எப்போதும் சமூகத்தில் இருக்கும் கடைக்கோடி மனிதனின்
வலி நிறைந்த வாழ்வு வரை சிந்திக்கும். யாருக்கும் தோன்றாத எண்ணங்கள் அவரின்
மூளையில் தோன்றும். அப்படி ஒரு சிந்தனையால் உதித்த திட்டம்தான் 1972ல் தொடங்கப்பட்ட தொழுநோய் ஒழிப்பு
மற்றும் மறுவாழ்வு திட்டம்.
இத்திட்டத்தின்
படி, ஒரு காப்பகத்தை
உருவாக்கி, அதில் தொழுநோயால்
பாதிக்கப்பட்ட மக்களுக்கான வாழ்வாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வது
தான் இதன் திட்டம். இதனால் பயன்பெற்ற மக்கள் பலர்.
நகராட்சிக்கு ஒரு
தொழுநோய் மற்றும் இரவலர் மறுவாழ்வு இல்லங்கள் அமைத்தார்.
சமூகமே நெருங்கப் பயப்படும் இத்தகைய நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக
இப்படி ஒரு திட்டத்தை ஏற்படுத்திய கலைஞரைப் பேரருளாளன்
சொல்வது மிகப் பொருத்தமாக இருக்கும்.
"என் உயிரினும்
மேலான அன்பு உடன்பிறப்புகளே" என்று கலைஞர் சொல்லும்போதும், அந்த வார்த்தைக்கு மக்களிடையே எழும் உணர்வுப்பூர்வமான ஆரவாரத்திலும், ஆர்ப்பரிப்பிலும், பெருகும் கண்ணீரிலும் எப்பொழுதும்
உண்மைத்தன்மை இருக்கும். அந்தக் கரகரத்த குரல் இந்த மண்ணையும் மக்களையும்
கட்டிப்போட்டதன் காரணம் இதுதான். கடைக்கோடி மனிதனின் வலியும் கலைஞருக்குத்
தெரிந்திருந்தது. அதனால்தான் அவர் கலைஞர்.
தமிழ் வெல்லும்! தமிழ் வாழ்க!
கருத்துகள்
கருத்துரையிடுக